முகப்பு
தற்போதைய செய்திகள்

பிசான பருவ சாகுபடிக்கு கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் 14,867 ஏக்கர் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல் கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் மூலம் பாசனம் நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் 14,867 ஏக்கர் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல் கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் மூலம் பாசனம் நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் 84 அடி கொள்ளளவு கொண்டு ராமநதி அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 81.50 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 74 அடியாகவும் இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இதனிடையே பிசான பருவ சாகுபடிக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் மூலம் பாசனம் பெறும் 32,025.02 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி வெள்ளிக்கிழமை மாலை கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்காக காதி மற்றும் கிராம தொழில்கள்துறை அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் திறந்து வைத்தார். மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன், மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி பிசான பருவ சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு்ள்ளது. பாசனத்திற்கு வருகிற 31.03.2013 வரை 143 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும்.

கடனாநதி அணையின் மூலம் 9923.22 ஏக்கர் நிலங்களும், ராமநதி அணையின் மூலம் 4943.51 ஏக்கர் நிலங்களும் அடவிநயினார் அணையின் மூலம் 7643.15 ஏக்கர் நிலங்களும், கருப்பாநதி அணை மூலம் 9515.14 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்றார் அவர்.

கடனாநதி அணையில் இருந்து 125 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 60 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 45 கனஅடியும், கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. தேவையை பொறுத்து கூடுதலாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பி. தங்கவேல், உதவி செயற்பொறியாளர்கள் என். ஞானசேகரன், எஸ். மாரியப்பன், உதவி பொறியாளர்கள் எஸ். சங்கரராஜ், பேட்ரசன், நந்தினி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆ. சிவாகமி, ஆழ்வார்குறிச்சி பேரூராட்சித் தலைவர் முத்தையா,

பேரூராட்சி நிர்வாகஅதிகாரி லெனின், தர்மபுரம்மடம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.பி.எம். ரசூல்முகம்மது, நீர்பாசன சங்க நிர்வாகிகள் ஆர். கசமுத்து, செளந்தராஜன், ஜீவா என்ற அருணாசலம், வேல்பாண்டியன், பூசக்கிளி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், அருள்வேல்ராஜ், சங்கர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →