மலைப்பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து: 4 பேர் சாவு?
வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை கவிழ்ந்ததில் 4 பேர் அதே இடத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் 18 பெண்கள் உள்பட 43 பேர் காயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து பழனி வந்த அரசுப் பேருந்து ஆழியாறு அருகே மலைப்பாதையில் சனிக்கிழமை கவிழ்ந்ததில் 4 பேர் அதே இடத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது. மேலும் 18 பெண்கள் உள்பட 43 பேர் காயமடைந்தனர்.
வால்பாறையில் இருந்து பழனிக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்றது. இதில் 54 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது. டிரைவர் சிவக்குமார், நடத்துநர் சுப்பிரமணியம் ஆகியோருடன் பயணிகள் 54 பேரும் பேருந்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆழியாறு அருகே மலைப்பாதையின் 2வது சுற்றில் கொண்டை ஊசி வளைவில் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி அருகே இருந்த 60 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் சென்று பேருந்தில் அடிபட்டுக் கிடந்தவர்களை மீட்டனர்.
காயமடைந்தவர்களில் 18 பெண்கள் உள்பட 43 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 5 பெண்கள் உள்பட 17 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் பேருந்துக்குள் இருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது.
துணை சபாநாயகரின் உதவி:
விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவர்களை வரவழைக்கப் போராடிக் கொண்டிருந்தார். இருந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.