சிதம்பரத்தில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு: கவலைக்கிடம்
சிதம்பரத்தில் தலைமைக் காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டியது மர்ம கும்பல்.
சிதம்பரத்தில் தலைமைக் காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டியது மர்ம கும்பல்.
சிதம்பரம் தில்லை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் ராஜா (39). இவர் சிதம்பரம் காவலர் குடியிருப்பில் இருந்து நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தது. அதனைக் கண்ட ராஜா அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் ஆட்டோ ஓட்டுநரின் லைசன்ஸைப் பெற்றுக் கொண்டு, காவல் நிலையம் வருமாறு அவர்களிடம் கூறி தனது வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், அவரை வழிமறித்த ஆட்டோவில் இருந்த 3 பேர், அரிவாள், கத்தி கம்புகளால் தலைமைக் காவலர் ராஜாவின் தலையில் வெட்டி, கை கால்களில் வெட்டிச் சென்றது.
கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் சென்னையில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ராஜா. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ராஜாவைத் தாக்கியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.