பண்ருட்டியில் மணல் லாரி ஓட்டுநர்கள் சாலைமறியல்
பண்ருட்டியில் மணல் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டியில் மணல் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி பகுதியில் அரசு மணல் குவாரியில் தனிநபர் ஒருவர் மொத்த குத்தகை எடுத்து அதை ஓரிடத்தில் மொத்தமாக கொட்டிவைத்து, மணல் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மணல் அள்ளுவது தொடர்பாக இரு ஊர்களுக்கு இடையே பிரச்னை இருந்துள்ளது. இரு தரப்புமே மணல் அள்ளுவதற்கும், அதை வெளியே கொண்டு செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குவாரியில் இருந்து மணல் எதுவும் அனுப்பப் படவில்லை. இதனால், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மணல் எடுத்துச் செல்ல கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த லாரிகள் அங்கேயே தேங்கி நிற்கின்றன. சாலையில் குறுக்கும் நெடுக்குமாக சுமார் 2000 லாரிகள் நிற்பதால், எந்த லாரியையும் சாலையை விட்டு அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையைப் பயன்படுத்தி, லாரிகளில் இருந்து பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். லாரிகளில் இருந்து சில பாகங்களைக் கழற்றிச் சென்றுள்ளனர் என்று புகார் தெரிவித்த லாரி ஓட்டுநர்கள், விரைவில் மணல் அளிக்க வேண்டும் அல்லது, எங்களது லாரிகளையாவது வெளியில் எடுத்து திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், கடந்த ஒருவாரமாக சரியான உணவு, குடிநீர் கிடைக்காமல் தாங்கள் அவதியுறுவதாகவும், இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராத நிலையில், நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெகுதூரம் அணிவகுத்து நிற்கின்றன.