பொது இடத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு
சிதம்பரம் நகரில் பொதுஇடத்தில் அனுமதியின்றி மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து டிஜிட்டல் பேனர் வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் நகரில் பொதுஇடத்தில் அனுமதியின்றி மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து டிஜிட்டல் பேனர் வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் நகரில் மேலவீதி கஞ்சித்தொட்டி மற்றும் காந்திசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஊர்தி பயணம் நடத்துவது குறித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் கோப்புகளில் கையெழுத்திடுவது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவினர் எதி்ர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அறிந்த நகர போலீஸார் திங்கள்கிழமை இரவு அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர். மேலும் பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), ராமமூர்த்தி (விக்கிரவாண்டி), மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், மூசா, மாவட்டச் செயலாளர்கள் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகிய 8 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.