சந்தேகத்தில் மனைவியை கொலை செய்தவர் கைது:தற்கொலை என நாடகமாடியது அம்பலம்
சென்னை பாடி அருகே சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பாடி அருகே சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பாடி அவ்வை நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் மதிபிரகாஷ் (35). இவர் அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்கிறார். மதியின் மனைவி வனஜா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 9 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
Advertisement
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு, வனஜா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றார். அங்கு வனஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேவேளையில் வனஜாவின் தங்கை கலையரசி, கொரட்டூர் காவல் நிலையத்தில் தனது அக்கா சாவில் சந்தேகம் உள்ளது, மதிபிரகாஷிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார்.
இது குறித்து கோட்டாட்சியர் கலையரசி விசாரணை செய்தார். விசாரணையில் வனஜாவின் நடத்தையின் மீது கணவர் மதிக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் எழுந்த பிரச்னையில் வனஜாவை, அவர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதேபோல வனஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸார் மதிபிரகாஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதன்படி போலீஸார், மதிபிரகாஷை புழல் சிறையில் அடைத்தனர்.