முகப்பு
தற்போதைய செய்திகள்

மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொங்கல் வைக்க முயன்ற 606 பேர் கைது

ஈரோடு மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொங்கல் வைக்க முயன்றதாக 606 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:07 AM
பகிர்:

ஈரோடு மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொங்கல் வைக்க முயன்றதாக 606 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு பொங்கல் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி தடையை மீறி பொங்கல் வைக்கப் போவதாக நில மீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதன்படி ஈரோடு ஈஸ்வரன் கோவில் அருகே 1,000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வியாழக்கிழமை கூடினர். பின்னர் அங்கிருந்து பொங்கல் பானை, அடுப்பு, விறகு மற்றும் பொங்கல் வைக்கத் தேவையான பொருள்களுடன் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு நில மீட்பு இயக்கத் தலைவர் ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமை வகித்தார். இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் பூசப்பன், நில மீட்பு இயக்கச் செயலர் கைலாசபதி, அமைப்பாளர் மல்லிகா சுப்பிரமணியம், பாஜக பிரசார அணி மாநிலத் தலைவர் ஆ.சரவணன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக, கேரள பொறுப்பாளர் ராஜன், இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சண்முகசுந்தரம், பாஜக மாவட்டத் தலைவர் பொன்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

திருவேங்கடசாமி வீதி அருகே ஊர்வலம் வந்தபோது அவர்களை ஈரோடு நகர டிஎஸ்பி பெரியய்யா தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது டிஎஸ்பியுடன் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து பெண்கள் சாலையில் அமர்ந்து பொங்கல் வைக்க முயன்றனர். அதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். 406 பெண்கள் உள்பட 606 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.