முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் 4 வழிச் சாலையில் குறுகிய சேவை சாலையை அகலப் படுத்த வேண்டும்: எம்.எல்.ஏ பாண்டியராஜன் கோரிக்கை

விருதுநகரில் வடக்கு பகுதி நுழைவு வாயில் பகுதியில் தேசிய 4 வழிச்சாலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குறுகிய அளவிலான சேவைச்சாலையை அகலப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்

Updated On : 25 ஏப்ரல், 2013 at 3:52 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:57 PM

விருதுநகரில் வடக்கு பகுதி நுழைவு வாயில் பகுதியில் தேசிய 4 வழிச்சாலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குறுகிய அளவிலான சேவைச்சாலையை அகலப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    இது தொடர்பாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் திட்ட இயக்குநர் மதுசூதனன் ரெட்டிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் வடக்கு பகுதியில் 4 வழிச்சாலையில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும், உள்ளூர்  இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் சேவைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக விருதுநகர் வடக்கு நுழைவு வாயில் பகுதியில் தொடங்கும் சேவைச்சாலை போக்குவரத்திற்கும் லாயக்கற்று குறுகலாக உள்ளது.
    எனவே இக்குறிப்பிட்ட சாலையில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை குறைத்து, திருப்ப வேண்டியிருக்கிறது. அதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையில் சேவைச்சாலை தொடங்கும் இடத்தில் மகளிர் கல்லூரியும் முக்கிய அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. எனவே, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர்கள் வரையில் சாலையை கடந்து செல்லும் போது ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
   இந்தக் குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் அனைத்தும் 110 கி.மீ வேகத்தில் செல்கிறது. அப்போது, சேவைச்சாலையை கண்டுபிடித்துச் செல்வதற்குள் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், இக்குறிப்பிட்ட சாலையை சத்திரரெட்டிபட்டி கிராமத்திலிருந்து தொடங்குமாறும், அகலப்படுத்தி சாலையோரப் பகுதியில் சேவைச்சாலை குறித்த தகவல் பலகையும் வைக்க வேண்டும்.
    அதேபோல், இந்த சாலையில் இருந்து சிவகாசி நகரத்திற்கு செல்வதற்கு விருதுநகரின் மேற்கு பக்கத்தில் சேவைச்சாலை குறுகிய நிலையில் அமைந்துள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்களுக்கு இச்சாலையை அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதனால், முன்புறம் சிறிது தூரம் சென்று விட்டு மறுபடியும் இக்குறிப்பிட்ட சாலை வழியாகச் செல்கிற நிலையிருக்கிறது. இதனால், எரிபொருள், அலைச்சல் போன்றவைகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு சேவைச்சாலைகள் குறித்து பெரிய அளவிலான பெயர் பலகை வைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநர் மதுசூதனனுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.