தேமுதிக அனைவருக்கும் பொதுவான இயக்கம்: விஜயகாந்த்
நான் சிறுவனாக இருக்கும்போது மதுரை மேலமாசி வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்வேன். அன்று முதல் தொடர்ந்து இஸ்லாமியர்களுடன் நெருங்கிப் பழகி வருகிறேன்.இயன்றதைச் செய்வோம்
ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் பொதுவான கட்சியாக தேமுதிக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் சிறுவனாக இருக்கும்போது மதுரை மேலமாசி வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்வேன். அன்று முதல் தொடர்ந்து இஸ்லாமியர்களுடன் நெருங்கிப் பழகி வருகிறேன்.இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்பது தான் தேமுதிகவின் கொள்கை.ரம்ஜான் நேரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி ஏழைகளுக்கு உதவுவதோடு, பக்ரீத் பண்டிகையின்போதும் குர்பானி கொடுத்து வருகிறேன்.இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு அதனை செயல்படுத்தியும் வருகிறேன். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். இது நமக்கு பெருமை.
Advertisement
ரம்ஜான் மட்டுமல்ல, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடி வருகிறோம். எம்மதமும் சம்மதம் என்பதைப் பின்பற்றி வருகிறோம். ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் பொதுவான இயக்கமாக தேமுதிக உள்ளது.ஏழைகளை மேம்படுத்துவது, இளைஞர்களை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் தேமுதிக ஈடுபட்டு வருகிறது என்றார் விஜயகாந்த்.
தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், தலைமை அலுவலகச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.