முகப்பு
தற்போதைய செய்திகள்

நிதி இழப்பு செய்ததாக 2 ஊராட்சித் தலைவர்கள் நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவர் த.சின்னத்தாய் தனது சுய லாபத்துக்காகவும், பொது நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:07 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் நிதி இழப்பு செய்ததாக இரண்டு ஊராட்சித் தலைவர்களை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவர் த.சின்னத்தாய் தனது சுய லாபத்துக்காகவும், பொது நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் முறைகேடுகள் புரிந்து அரசு விதிமுறைகளை மீறியும், ஊராட்சிக்கு ரூ.6 லட்சத்து ஆயிரத்து 792 நிதி இழப்பை திட்டமிட்டு ஏற்படுத்தியும், அதிகார துஷ்பிரயோகமும் செய்து உள்ளார்.இதேபோல, அசூர் ஊராட்சித் தலைவர் செ.சண்முகத்தாய் தனது சுய லாபத்துக்காகவும், பொது நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் முறைகேடுகள் புரிந்து அரசு விதிமுறைகளை மீறியும், உரிய அரசாணைகளில் கூறப்பட்டு உள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கி ஊராட்சிக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 82 ஆயிரத்து 902 நிதி இழப்பை திட்டமிட்டு ஏற்படுத்தி உள்ளார்.

பொதுநன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 உட்பிரிவு 11–ல் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின் படி கட்டாலங்குளம் ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து த.சின்னத்தாய் என்பவரையும், அசூர் ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து செ.சண்முகத்தாய் என்பவரையும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994–ல் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்களின்படியும், ஊராட்சிகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தாத வகையில் செயல்பட மற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.