கல்வி தேர்ச்சியில் கடலூர் மாவட்டம் பின்தங்கியுள்ளதால் வெட்கி தலைகுனிய வேண்டியது உள்ளது
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் 32 மாவட்டங்களில் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ள கடலூர் மாவட்டம் 31வது இடத்தை பெற்றுள்ளதால் வெட்கி தலைகுணிய வேண்டிய
தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் 32 மாவட்டங்களில் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ள கடலூர் மாவட்டம் 31வது இடத்தை பெற்றுள்ளதால் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழகஅரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் 314 மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினியினை வழங்கி கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியவர்கள் கோயில்கள் கட்டினார்கள், மடங்களை உருவாக்கினார்கள். ஆனால் சுவாமி சகஜானந்தா சற்று வித்தியாசமாக சிந்தித்து பெரிய செயலை செய்துள்ளார். அடித்தட்டு மக்களை உயர்த்த கல்விக் கோயிலை திறந்ததுதான் மிகப்பெரியதாகும். மேலும் தான் தொடங்கிய அந்த கல்விச்சாலைக்கு தனது பெயரை வைக்காமல் சாதிய கொடுமைக்கு ஆளான நந்தனார் பெயரை வைத்தவர் சுவாமி சகஜானந்தர். அப்படிப்பட்ட மகானுக்கு சிதம்பரத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தேன். கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். விரைவில் மணி மண்டபத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். கல்வி தேர்ச்சியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் கன்னியாக்குமரி, கோவை மாவட்டங்களில் வழங்கப்படும் அதே சலுகைதான் கடலூர் மாவட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாவட்டம் கல்வி தேர்ச்சியில் 31 வது இடத்தில் உள்ளதால் வெட்கி தலைகுணிய வேண்டியதுள்ளது. எனவே தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூகஆர்வலர்கள் ஒருங்கிணைந்து கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஜி.அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கச் செயலர் பி.ராஜசேகரன் வரவேற்றார். நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் வாழ்த்துரையாற்றினார். கல்விக்குழு உறுப்பினர் டி.ஜெயராமன், நகரமன்ற உறுப்பினர்கள் கே.வெங்கடேசன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். உதவி தலைமை ஆசிரியர் டி.வத்சலா நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியை ஆர்.மாலா தொகுத்து வழங்கினார்.
பின்னர் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 337 மாணவர்களுக்கும், வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 127 மாணவ, மாணவியர்களுக்கும், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 500 மாணவியர்களுக்கும் தமிழகஅரசின் விலையில்லா மடிக்கணினியினை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பால்ராஜ், நகுலன், ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.