கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை
சொத்து தகராறில் அப்பா, தம்பி உள்ளிட்ட 4 பேரை விஷம் வைத்து கொலை செய்த குற்றத்திற்காக விவசாயிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சொத்து தகராறில் அப்பா, தம்பி உள்ளிட்ட 4 பேரை விஷம் வைத்து கொலை செய்த குற்றத்திற்காக விவசாயிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி நாயுடு(80). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் சின்னையன்(60). இரண்டாவது மனைவியின் மகன் வேடி(எ)வேடியப்பன்(45). துரைசாமி நாயுடு தனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தை தனக்கு அரை ஏக்கர் வைத்துகொண்டு, மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தை தனது இரு மகன்களுக்கும் தலா ஒன்றரை ஏக்கர் நிலத்தை பாகம் பிரித்து கொடுத்துவிட்டார்.
இந்தநிலையில், துரைசாமி நாயுடு, தனது இரண்டாவது மனைவியின் மகனான வேடியப்பன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் அவருடைய அரை ஏக்கர் நிலத்தையும் தனது இரண்டாவது மகனுக்கே விவசாயம் செய்ய கொடுத்துவிட்டார். ஆனால், அந்த நிலத்தையும் பிரித்து கொடுக்க வேண்டும் என சின்னையன் தகராறு செய்து வந்துள்ளார். அதற்கு துரைசாமி நாயுடு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2010 ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தம்பி வேடியப்பனின் மனைவி மகேஸ்வரி(40) அவருடைய வீட்டின் வெளியே தங்கள் குடும்பத்தினர் சாப்பிட கூழ் சமைத்து கொண்டிருந்தாராம்.
அப்போது மகேஸ்வரி வீட்டிற்குள் சென்ற நேரத்தில், அங்கு சென்ற சின்னையன் தான் வைத்திருந்த பூச்சிக்கொள்ளி மருந்தை அந்த கூழில் ஊற்றிவிட்டு தப்பிவிட்டார். இதை அறியாத துரைசாமி நாயுடு, அவரது இளைய மகன் வேடியப்பன், உறவினர் சின்னபிட்டா நாயுடு(70), மனைவி மகேஸ்வரி(40), மகன் அரவிந்த்(8), மகள்கள் அபிநயா(எ)அபிராமி(7), நிதீஸ்வரி(4), கார்த்திகா(2) ஆகியோர் அந்த கூழை சாப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதில், துரைசாமிநாயுடு, வேடியப்பன், அபிநயா(எ)அபிராமி, சின்னபிட்டா நாயுடு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மகேஸ்வரி, அரவிந்த், நிதீஸ்வரி, கார்த்திகா ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சிகிச்சையில் அவர்கள் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, அப்போதைய போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் அர்ஜூனன் வழக்கு பதிவு செய்து சின்னையனை கைது செய்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சம்பத் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் 4 பேரை விஷம் வைத்து கொலை செய்த குற்றத்திற்கு சின்னையனுக்கு, தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 4 ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், மற்ற 4 பேரை கொலை செய்ய முயற்சி செய்ததற்காக தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இந்த தண்டனை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு பொது வழக்கறிஞர் கதிரேசன் ஆஜரானார்.