சங்கரன்கோவில் அருகே பொதிகை ரயில் சுமை ஆட்டோ மீது மோதி ஒருவர் பலி
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று காலை சென்னையில் இருந்து செங்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த பொதிகை விரைவு ரயில் மோதி ஒருவர் பலியானார்.
சங்கரன்கோவிலில் ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற சுமை ஆட்டோ மீது ரயில்மோதியதில், ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள பந்தப்புளி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் குமார் (28). இவர் குடும்பத்துடன் இலவன்குளம் கிராமத்தில் வசித்து வந்தார்.சுமை ஆட்டோ ஓட்டுனரான இவர் சனிக்கிழமை அதிகாலை 7.30 மணிக்கு இலவன்குளத்தில் இருந்து சுமை ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சங்கரன்கோவில் நோக்கி சென்றார்.
சங்கரன்கோவிலுக்கும் இலவன்குளத்திற்கும் இடையில் உள்ள ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ஆட்டோ மீது மோதியது.இதில் சுமை ஆட்டோ சுமார் 200 ஆடி தூரம் தூக்கி வீசப்பட்டது. அதில் இருந்த ஆட்டோ டிரைவரும் பல அடிதூரம் தனியாக தூக்கி வீசப்பட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் குமார் இறந்தார். ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில் அதன் மேல் போடப்பட்டிருந்த கூரைகள் பிய்த்து ஏறியப்பட்டன.ஆட்டோ பல அடிதூரம் உருண்டு பள்ளத்தில் பாய்ந்தது.விபத்தில் இறந்த குமாருக்கு பத்மாவதி(26) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் கனி என்ற மகளும் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக சுமார் 8 மணிக்கு சென்றது.