முகப்பு
தற்போதைய செய்திகள்

மருத்துவ மாணவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்

1991 முதல் மத்திய அரசு பின்பற்றி வரும் நவீன தாரளமயக் கொள்கையினால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்திய மிகவும் பின்தங்கியுள்ளது. வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற மிகச்சிறிய நாடுகள்

Updated On : 28 ஆகஸ்ட், 2013 at 7:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:55 PM

கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைத் திட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் நடைபெற்ற, சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் எழுதிய, டாக்டர்களுக்கான கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் - யாரை ஏமாற்ற என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது:

1991 முதல் மத்திய அரசு பின்பற்றி வரும் நவீன தாரளமயக் கொள்கையினால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்திய மிகவும் பின்தங்கியுள்ளது. வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற மிகச்சிறிய நாடுகள் கூட சுகாதாரத்தில் நம்மைவிட முன்னேறியுள்ளன.2000-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதார வசதியை ஏற்படுத்துவதே லட்சியம் என்று 1984-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். ஆனால், 2013-ஆம் ஆண்டிலும் அவரது லட்சியம் நிறைவேறவில்லை.சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை. தனியார் மயம் காரணமாக மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் கடைச்சரக்காகி விட்டன. மருத்துவ மேற்படிப்புக்கு தனியார் கல்லூரிகளில் ரூ. 1 கோடி வரை வசூலிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

Advertisement

இதனால் சாதாரண ஏழை, கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதிóல்லை. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் அதனை மருத்துவ மாணவர்களிடம் திணிக்கக் கூடாது.கிராமப்புறங்களில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மருத்துவ மாணவர்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்தி இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். தங்களின் உரிமைகளுக்காக போராடும் மருத்துவ மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம். தவறான கொள்கைகளால் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நிய முதலீடுகளை மட்டுமே நம்பியிருப்பதால், அந்த முதலீடுகள் வெளியேறும்போது இதுபோன்ற கடும் நெருக்கடி ஏற்படவே செய்யும். மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நிலைமை மாறும்.உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேறியதால் தான் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது தவறானது. பங்குச் சந்தை வீழ்ச்சி, நாட்டின் வீழ்ச்சியாகாது. சமூக நலத் திட்டங்களுக்கு எதிரானவர்கள் இதுபோன்ற தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், சமூக சமுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர்  த. அறம், ஏ.ஐ.டி.யு.சி.யின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.எஸ். தியாகராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.