அம்பை டாக்டர் கொலை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பில் 200 தனியார் மருத்துவமனைகள்
அம்பாசமுத்திரத்தில் டாக்டர் அருள், அவரது மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் போலீஸாரால்
அம்பாசமுத்திரத்தில் டாக்டர் அருள், அவரது மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அம்பாசமுத்திரம் தெற்கு மாடத் தெருவில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவரான டாக்டர் அருள், அவரது மனைவி ஜான்சிராணி ஆகியோர் டிச. 1 ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை கொலையாளிகள் யாரும் பிடிபடவில்லை.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் காவல்துறை உயர்அதிகாரியை சந்தித்து இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் புறநகரில் இயங்கி வரும் 155 தனியார் மருத்துவமனைகளில் காவல்துறையினரால் கண்காணிப்பு புத்தகம் போடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைகளுக்கு 2 காவலர்கள் தினமும் சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புறநகரில் இப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் 50 க்கும் மேற்பட்ட தனியார் மருத்தவமனைகளிலும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.