சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் சித்ரசபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராயர் சுவாமியை முன்னிறுத்தி திங்கள்கிழமை காலை 9.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் தில்லைநாகபூஷண தீட்சிதர் பசுக்கொடியை ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பஞ்சமூர்த்தி தங்கம், வெள்ளி மஞ்சங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
வருகிற டிச.17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.18-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச.19-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
Advertisement
உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்ரசபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜதீட்சிதர், துணைச் செயலாளர் எஸ்.டி.ருத்ரகணேஷ் தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.