மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே டிரோன்: 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகே டிரோன் பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகே டிரோன் பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சனிக்கிழமை மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மமதா, கஜோலுக்குச் செல்வதற்காக ஹெலிகாப்டரில் ஏறத் தயாராக இருந்தபோது, அந்தப் பகுதியை படம் பிடிப்பதற்காக இந்த டிரோன் இயக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இது குறித்து அதிகாரி கூறுகையில்: "சனிக்கிழமை முதல்வர் ஹெலிகாப்டர் புறப்படும்போது அதன் அருகே டிரோன் வந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது."
Advertisement
Advertisement
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் டிரோன் பறக்கவிடுவதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சில உள்ளூர் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நூர் அக்தர் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றுவதற்காக காட்சிகளை எடுக்கவே டிரோன் பறக்கவிடப்பட்டது," என்றார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.