விருதுநகர் அருகே வெவ்வேறு ரயில் விபத்தில் 2 பேர் பலி
விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகரில் அகமது நகரைச் சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் சையது முகமது(30). இவரது மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். அதேபோல், செவ்வாய்கிழமை இரவும் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சையது முகமது மேம்பால அடியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் இரவு 10.15 மணிக்கு தூத்துக்குடி-சென்னை வரையில் செல்லும் முத்துநகர் விரைவு ரயில் முன்பு பாய்ந்தாராம். இதனால் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் சுபாஷ்(21). இவர், இப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். சில நாள்களாக வீட்டில் தாய், தந்தையருடன் பிரச்னை செய்து வந்தாராம். இதனால் மனம் உடைந்த சுபாஷ் இக்கிராமம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் அடையாளம் தெரியாத ரயில் மோதி உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக கிராமத்தினர் பெற்றோர்களுக்கும் ரயில்வே காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.