தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
பொது மக்களின் துயரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட
பொது மக்களின் துயரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக அரசின் செயல்பாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.1991 முதல் 2013 வரை தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.எதிர்க்கட்சியாக இருந்து இடைத்தேர்தலில் தோற்றால், "பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது' என்பதும், ஆளும்கட்சியாக இருந்தால் "மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றோம்' என்பதும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் வழக்கமாகிவிட்டது.
இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால், மக்கள் பிரச்னைகளை கவனிக்காமல் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர்.இவற்றையெல்லாம் தமிழக மக்கள் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது மௌனப் புரட்சிதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை நினைவில் கொண்டு, வளர்ச்சிப் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட வேண்டும். விலைவாசியைக் கட்டுப்படுத்தி, மின்வெட்டை அகற்றி, சட்டம் - ஒழுங்கை செம்மையாக்கி மக்கள் துயரை துடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement