பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதை மார்ச் மாதத்திற்குள் திறக்க பணிகள் தீவிரம்
பழனியில் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. பாலக்காடு முதல் ராமேஸ்வரம் வரையிலும், கோவையில் இருந்து மதுரை வரையிலும் என இப்பாதையில்
பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான அகலரயில் பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பழனியில் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. பாலக்காடு முதல் ராமேஸ்வரம் வரையிலும், கோவையில் இருந்து மதுரை வரையிலும் என இப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதியிலும் இருந்து பக்தர்கள் பழனி வந்து செல்ல செலவு குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி-பழனி-திண்டுக்கல், போத்தனூர்-பொள்ளாச்சி மீட்டர் கேஜ் ரயில்பாதை அகற்றப்பட்டு அகலரயில்பாதையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திட்டமிடப்பட்ட திட்ட மதிப்பீடுகள் பல்வேறு கால கட்டங்களில் மாறியதால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றது.
கடந்த சிலமாதம் முன்பு பொதுமக்கள், அரசியல்வாதிகள், வியாபாரிகள் தொடர் கோரிக்கையால் பழனி முதல் திண்டுக்கல் வரையிலான அகலரயில் பாதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து பழனி முதல் திண்டுக்கல், மதுரை, சென்னை வரையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பயணிகள் மத்தியில் இந்த தடங்கள் பிரபலமான நிலையில் இம்மாத இறுதிக்குள் பழனி-திருச்செந்தூர் ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே ஒப்பந்தகாரர்கள் தாமதத்தால் பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான ரயில்பாதை பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது.
தற்போது மதுரை கோட்டத்தின் கீழ் வரும் பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது தண்டவாளங்களை விரைவாக அமைக்கும் பிளேசர் இயந்திரம் பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு சுமார் 10 கி.மீ தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கும் திறன்படைத்தது. தற்போது புஷ்பத்தூர் வரையிலான பாதை போக்குவரத்துக்கு சிக்கலின்றி உள்ளதால் ரயில்களில் ஜல்லிகற்கள் ஆங்காங்கு கொட்டப்பட்டு வருகிறது.
வரும் மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவுபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கும், பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை சேலம் ரயில்வே கோட்டத்துக்கும் எல்லைகள் வருவதால் இரு கோட்டங்களும் பணிகளை விரைவு படுத்தினால் பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு, பழனி-பொள்ளாச்சி-போத்தனூர் அகலரயில் பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆகவே, இப்பணிகளையும் விரைவுபடுத்த எம்பி.,க்கள் முயற்சி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.