சர்வதேச விதை ஆய்வு குழுமம் குறைந்தபட்ச முறைப்புத்திறன் நிர்ணயம் செய்துள்ள அளவைப் பார்த்து விற்பனை நிலையங்களில் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டும் என விதை ஆய்வு மைய துணை இயக்குநர் நாராயண பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தரமான விதைகள் என்பது அதன் முளைப்புத்திறனை வைத்து கண்டறிப்படுகிறது. இதில், ஒவ்வொரு பயிருக்கும் சர்வதேச விதை ஆய்வு குழுமம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச முளைப்புத் திறன் குறித்து விவசாயிகள், விதை வியாபாரிகள், விதை உற்பத்தியாளர்கள் ஆகியோர் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே சில பயிர்களின் முளைப்புத்திறன்கள் தரப்பட்டுள்ளன.
மக்காச்சோளம்-90 சதவீதம், கொண்டைக்கடலை-85 சதவீதமும், நெல், எள், கொள்-80 சதவீதமும், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகள்-75 சதவீதமும், நிலக்கடலை, சூரியகாந்தி, தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ், நூக்காஸ், முள்ளங்கி, தக்கை பூண்டு, முருங்கை-70 சதவீதமும், ரகபருத்தி, வெண்டை, காளிபிளவர், கொத்தமல்லி, 65 சதவீதமும், மிளகாய், காரட், பீட்ரூட், புடலை, பாகக்காய் மற்றும் பீர்க்கம்காய் ஆகிய விதைகள் 60 சதவீதமும் இருக்க வேண்டும்.
எனவே உற்பத்தி செய்யப்படும் விதைகளின் முளைப்புத்திறன், அரசால் விதை பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் விநியோகம் செய்யப்படும் விதைகள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட அளவு முளைப்புத்திறனை பெற்றிருப்பது அவசியம் ஆகும். இதற்கும் குறைவான முளைப்புத்திறன் கொண்ட விதைகள் தரம் இல்லாதவை என கண்டறியப்பட்டு விற்பனை தடை செய்யப்படும். எனவே விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகள் வாங்கும் போது தரமானவைதான, முளைப்புத்திறன் குறைந்த விதையா என்பதை பார்த்து வாங்க வேண்டும் என விருதுநகர் விதை ஆய்வு மைய துணை இயக்குநர் நாராயண பிரசாத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.