புலிகள் காப்பகம் மூடல்: வெறிச்சோடிய பாபநாசம், மணிமுத்தாறு அருவிகள்
புலிகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகம் மூடப்பட்டதால் அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சபரிமலை
புலிகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகம் மூடப்பட்டதால் அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சபரிமலை சென்று திரும்பும் ஐயப்பப் பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
களக்காடு, முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் குறித்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு செங்கல்தேரி, தலையணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், களக்காடு நம்பி கோயில்களுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி்க்கப்படுகின்றனர்.
அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அருவிகளில் நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லை. போக்குவரத்து நெருக்கடி இல்லை. அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகள், களக்காடு தலையணை, செங்கல்தேரி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்பப் பக்தர்கள் பெருமளவில் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குளித்து விட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த அருவிகள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் அருவிகளி்ல் குளிக்க முடியாமல் திரும்பினர்.
மலையில் சுவாமி தரிசனம்: பாபநாசம் மலையில் கோயில்தேரி சரகத்தில் தைலாத் ஓடை பகுதியில் கருப்பசாமி, வனபேச்சியம்மன் சிலைகள் வைத்து வழிபடும் நிகழ்வு நடைபெற்று வருவதை அறிய முடிந்தது. இந்த சுவாமி சிலைகள் வனப்பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுதந்திரமாக திரியும் குரங்குகள்: சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் அருவிகள் வெறிச்சோடியதால் குரங்குகள் உணவு கிடைக்காமல் திண்டாடும் நிலை காணப்பட்டது. மனித நடமாட்டம் இல்லாததால் குரங்குகள் தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக திரிந்தன.