முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் அரசுப் பேருந்து ஜப்தி

பழனி அருகே ஒட்டன்சத்திரம் புங்கவலசை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 2008ம் ஆண்டு தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் கட்டரிங்கமேடு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்த போது

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

பழனி அருகே இழப்பீடு வழங்காத காரணத்தால் மதுரைக் கோட்ட அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

பழனி அருகே ஒட்டன்சத்திரம் புங்கவலசை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 2008ம் ஆண்டு தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் கட்டரிங்கமேடு அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்த போது மதுரைக்கோட்ட அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.  இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் அவரது மனைவி முத்தம்மாள் மற்றும் வாரிசுகள் இழப்பீடு கோரி பழனி சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சேனாபதி மூலம் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 23.6.2010ல் ரூ.4 இலட்சத்து 77 ஆயிரத்து 500 மற்றும் நீதிமன்ற செலவுகளை இழப்பீடாக வழங்க உத்திரவிட்டார்.  ஆனால் மேற்படி போக்குவரத்து நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வரவே கடந்த 21.2.2013ல் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து  வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் இழப்பீட்டுத்தொகை நடப்பு தேதி வரை வட்டியுடன் சேர்த்து ரூ.5 இலட்சத்து 27 ஆயிரத்து 420ஐ போக்குவரத்து நிர்வாகம் வழங்குமாறும் வழங்காவிட்டால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்திரவிட்டார். 

இதையடுத்து வெள்ளிக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொள்ளாச்சியில் இருந்து பழனி மார்க்கமாக மதுரை செல்லும் மதுரைக் கோட்ட அரசுப் பேருந்தை நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்து பழனி சார்பு நீதிமன்றம் முன்பு நிறுத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.