சிதம்பரத்தில் கிருஸ்துவசபை அடிக்கல் நாட்ட எதிர்ப்பு: போலீஸார் சமரசம்
சிதம்பரம் அருகே சுலோச்சனா நகரில் கிருஸ்துவ ஜீவமார்க்கம் சபை அடிக்கல் நாட்டுவதற்கு அப்பகுதி மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் வியாழக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
சிதம்பரம் அருகே சுலோச்சனா நகரில் கிருஸ்துவ ஜீவமார்க்கம் சபை அடிக்கல் நாட்டுவதற்கு அப்பகுதி மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் வியாழக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று சமரசம் செய்ததால் கலைந்து சென்றனர்.
சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள சுலோச்சனா நகரில் ஜீவமார்க்கம் ஏசிஏ கிருஸ்துவ சபை அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விழா நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்களும், பாரதிய ஜனதா கட்சியினர் ஸ்ரீதரன், கணபதிராம், ஜோதிகுருவாயூரப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால் சம்பவ இடத்திற்கு சென்று இங்கு சபை கட்டப்படால் இப்பகுதியில் வசிக்கும் இந்து மக்களின் பொது அமைதி கெடும் எனவே சபை கட்ட அனுமதிக்க மாட்டோர் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், வட்டாட்சியர் எம்.விஜயா, இன்ஸ்பெக்டர்கள் பி.முருகானந்தம், உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அடிக்கல் நாட்டு விழாவிற்கு காவல்துறை வாரிய உறுப்பினர் மா.பிரகாஷ் வருவதால் எவ்வித பிரச்சனையும் செய்ய வேண்டாம். மேற்கொண்டு எவ்வித கட்டுமானப்ப பணியும் நடைபெறாது என உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்களும், பாஜகவினரும் கலைந்து சென்றனர். கிருஸ்துவ சபை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.