திருக்கோவிலூர் அருகே மடிக்கணினி கேட்டு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
திருக்கோவிலூர் அருகே எஸ்.கொல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோவிலூர் அருகே எஸ்.கொல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என்பதைக் கூறி பல முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாளை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படவுள்ளது. ஏற்கெனவே 3ம் ஆண்டு மாணவர்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், நாளை அசம்பாவிதம் ஏதும் வராமல் தவிர்க்க 3ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரியின் சார்பில் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி 3ம் ஆண்டு மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.