மக்கள் சக்தி இயக்கத் தலைவராக பேராசிரியர் ஏ.சண்முகம் தேர்வு
மக்கள் சக்தி இயக்கத் தலைவராக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் அரசியல் அறிவியல்துறைத் தலைவர்
மக்கள் சக்தி இயக்கத் தலைவராக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் அரசியல் அறிவியல்துறைத் தலைவர் முனைவர் ஏ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்கள்சக்தி இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் எம்.எஸ்.உதயமூர்த்தி மறைவிற்கு பிறகு மதுரையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.சண்முகம் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பேராசிரியர் ஏ.சண்முகம் தெரிவித்தது: மக்கள் சக்தி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு வருகிற மே.29-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே மே மாதம் சென்னையில் வெள்ளிவிழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக பள்ளி மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகஅரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் ரடி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகிய இரு அமைப்புகளை மத்தியஅரசு உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது. மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தமிழர்களை அழித்து போர் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதோடு, மற்ற நாடுகளையும் அத்தீர்மானத்தை ஆதரிக்க செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என ஏ.சண்முகம் தெரிவித்தார்.