நியாயவிலைக் கடை ஊழியரை பெண் ஒருவர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு
தூத்துக்குடியில் நியாயவிலைக்கடை ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் நியாயவிலைக்கடை ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரியைச் சேர்ந்த தமிழழகன் (52), தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள அமுதம் சிறப்பு அங்காடியில் பட்டியல் எழுத்தராகப் பணிபுரிகிறார். இன்று காலை கால்டுவெல் காலனியைச் சேர்ந்த உத்ரம் என்ற பெண் (50) குடும்ப அட்டையில் உள் தாள் ஒட்டுவதற்காக வந்துள்ளார். ஆனால் அவர் கொண்டு வந்த குடும்ப அட்டை அவருடைய மகன் பெயரில் ஆனது. மேலும், உள் தாள் ஒட்டினால்தால் பொங்கல் பொருள்கள் கொடுக்கப்படும் என்று இங்கே வதந்தி பரவியதால், உள் தாள் ஒட்டுவதற்காக கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், உள் தாள் ஒட்டுவதற்கு குடும்ப அட்டைதாரரான அவரது மகன் நேரில் வரவேண்டும் என்று கூறியுள்ளார் தமிழழகன். இதற்கு உத்ரம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் நீண்டு கொண்டு செல்ல, ஒரு கட்டத்தில் தனது செருப்பால் தமிழழகனை உத்ரம் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார் தமிழழகன். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் விசாரிப்பதாகக் கூறினர். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், விசாரணை மேற்கொள்ள உத்ரத்தை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் செய்தி பரவியதும், சுற்றிலும் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்திலும் பரபரப்பு நிலவியது.