இந்தியாவில் அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அன்புமணி
இந்தியாவில் அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 4 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளன என பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 4 ஆயிரம் கொலைகள் நடந்துள்ளன என பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பாமக நிர்வாகி விஜயகுமார் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை அன்புமணி ராமதாஸ் சென்று ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், துணை பொதுச்செயலாளர்கள் திருஞானம், பழ.தாமரைக்கண்ணன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் சிவ.திருநாவுக்கரசு, நகரச் செயலாளர் முத்து.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: தீவிரவாதிகள் அதிகமுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 86 பேர்தான் தேசிய பாதுகாப்பு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் பாமகவினர் 122 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுகிறது. மத்தியஅபசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த 22 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது எங்களது முதல் வெற்றியாகும். அதிமுக அரசிற்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 40 தொகுதிகளில் தோல்வியுற்றது.
அதே நிலை வரும் தேர்தலில் அதிமுக சந்திக்க நேரிடும். கடும் மின்வெட்டு, காவிரி நீர் பிரச்சனை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமகவிடம் நஷ்டஈடு கோரி வழக்கு போட்டுள்ளது காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. பாமக வன்முறையை தூண்டாதபோது நாங்கள் எப்படி நஷ்டஈடு தர முடியும். 2002-ம் ஆண்டு பிளசன்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்த போது தமிழகத்தில் அதிமுகவினர் 67 பேருந்துகளை உடைத்தனர். 8 பேருந்து தீவைத்து கொளுத்தினர். தரும்புரியில் 3 மாணவியர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அதற்கு முதலில் அதிமுக நஷ்டஈடு தரட்டும்.
2016-ம் ஆண்டு திராவிடக்கட்சிகள் இல்லாத ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட மாற்று அணி அமைத்து பாமக ஆட்சி அமைக்கும். ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இலவசமாக வழங்கப்படும். மற்ற இலவசங்கள் நிறுத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.