தருமபுரி கலவரம்: திவ்யாவின் கணவன் இளவரசன் மரணம்
தருமபுரியில் கலவரத்துக்குக் காரணமான காதல் ஜோடி- திவ்யாவின் கணவன் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தருமபுரி காதல் ஜோடி - திவ்யா இளவரசன் காதல் விவகாரத்தில் திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், இளவரசன், இன்று, தருமபுரி கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார்.
நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. மூளை சிதறிய நிலையில், அடிபட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.