குடிநீர் பிரச்சனையை கண்டித்து நகரமன்றக்கூட்டத்தில் திமுக, மூமுக, வி.சி கட்சிகள் வெளிநடப்பு
சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் (அதிமுக) தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் பேசுகையில் 'நகரில்
சிதம்பரத்தில் இன்று நடைபெற்ற நகரமன்றக்கூட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக, மூமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் (அதிமுக) தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் பேசுகையில் 'நகரில் குடிநீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உள்ளது. குடிநீர் உப்புநீராகவும், சுகாதார கேடாகவும் வருகிறது. மேலும் பல ஆண்டுகளாக வசித்தும் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்பினை காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து பின்னர் காலி செய்யவேண்டும். மேற்கண்ட இருபிரச்சனையை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.
பின்னர் ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன்,ரா.வெங்கடேசன், கோ.நடராஜன் உள்ளிட்ட திமுக நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்றக்கூடத்தை விட்டு வெளியேறினர். இதனையடுத்து குடிநீர் பிரச்சனை தீர்க்காததையும், பாலமான் ஆற்றில் நகராட்சி கழிவு நீர் கலப்பதை கண்டித்தும் மூவேந்தர் முன்னேற்றக்கழக உறுப்பினர் ஜி.செல்வராஜ் வெளிநடப்பு செய்தார். துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது குடியிருப்பினை காலி செய்ய உத்தரவிட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் பெரு.திருவரசு வெளிநடப்பு செய்தார். பின்னர் திமுக, மூமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்றக்கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.