முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிபோதையில் பேருந்தை ஓட்டி பசுமாடு மீது மோதி அரசு பஸ் டிரைவர் தப்பி ஓட்டம் 

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மதுரை புறநகர் பணிமனை கிளையின் அரசு பேருந்து 45 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்தை ஓட்டுநர் சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில், பேருந்து சூலக்கரையை அடுத்து சாலையோர உணவு விடுதியைக் கடந்து செல்லும்

Updated On : 2 ஜூன், 2013 at 4:54 PM
பகிர்:

விருதுநகர் அருகே குடிபோதையில் அரசு பஸ்ஸை ஓட்டி பசுமாடு மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நடுச்சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிய டிரைவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமேலாளர் பரிந்துரை செய்துள்ளார்.

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மதுரை புறநகர் பணிமனை கிளையின் அரசு பேருந்து 45 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்தை ஓட்டுநர் சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில், பேருந்து சூலக்கரையை அடுத்து சாலையோர உணவு விடுதியைக் கடந்து செல்லும் போது தாறுமாறக ஓடி ஓரமாக வந்த பசுமாடு மீது மோதினார். இதி்ல், பசுமாடு படுகாயம் அடைந்தது. இது தொடர்பாக பயணிகள் அருகில் சென்று ஒழுங்காக ஓட்டும் படி கூறியுள்ளனர். அப்போது, அவர் குடிபோதையிலும், வாய் நிறைய பான்பராக்கும் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குடிபோதையுடன் தொடர்ந்து பேருந்தை இயக்குவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பயணிகளின் எதிர்ப்பால் நிலைகுலைந்த ஓட்டுநர் சாலையோர உணவு விடுதி அருகே நான்கு வழிச்சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இந்நிலையில் நடுரோட்டில் நிறுத்தியிருந்ததால் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது.  இதையடுத்து, பயணிகள் அவசர தொலைபேசியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் தங்கதுரை உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து நடுரோட்டில் நின்று இருந்த அரசு பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Advertisement

உடனே நெல்லை செல்வதற்கு அருகில் சாத்தூர் பணிமனையிலிருந்து பேருந்து கொண்டு வர போலீஸார் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்தும் அனுப்பி வைக்காத நிலையில் நடத்துநர் நான்கு வழிச்சாலையில் நெல்லைக்குச் சென்ற அரசு பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் வரையில் அரசு பஸ்ஸை எடுத்துச் செல்வதற்கு பணிமனையில் யாரும் வரவில்லை என்பதால் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மதுரை கோட்ட பொது மேலாளர் கூறுகையில், மதுரை புறநகர்   பணிமனை கிளையைச் சேர்ந்த அரசு பேருந்தை குடிபோதையில் தாறுமாறக ஓட்டி நடுரோட்டில் நிறுத்திச் சென்ற ஓட்டுநர் சங்கரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.