பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாமலைப் பல்கலை. நுழைவுத்தேர்வு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் 7 மையங்களில் தொடங்கியது. இன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வினை சுமார் 13500 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 9-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தது:
பொறியியல், வேளாண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத மொத்தம் 24,587 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் இன்று மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 13500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அண்ணாமலைநகர் மையத்தில் மட்டும் 3,435 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டு மொத்த விண்ணப்பங்கள் 24,587-ல் மருத்துவப் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுத 14310 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளை விட, மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத 14310 மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப்படிப்புக்கான அனுமதி சேர்க்க முழுமையாக தகுதி அடிப்படையில் செய்யப்பட்டதால் நம்பிக்கை ஏற்பட்டு மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத அதிகம் பேர் விண்ணபப்பித்து தேர்வு எழுதியுள்ளனர்.
இன்று சிதம்பரம் அண்ணாமலைநகரில் தொலைதூர்கல்வி இயக்கக செமினார் ஹால், முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி கட்டடம், டெக்பார்க், பொறியியல் புலம், வேளாண் புலம் உள்ளிட்ட 6 கட்டடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வினை காலையும், மாலையும் சுமார் 3500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஏடிஎஸ்பி ராஜன் தலைமையில் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை போலீஸார் மற்றும் சிதம்பரம் காவல் கோட்ட போலீஸார் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிதம்பரம்-பஸ்நிலையத்திலிருந்து அண்ணாமலைநகருக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த காலங்களில் அனுமதி சேர்க்கை புரோக்கர்கள் வசம் இருந்ததால், இம்முறை முழுமையாக தகுதி அடிப்படையில் தேர்வு நடத்தப்படுவதால், இந்த ஆண்டு புரோக்கர்களால் தவறு ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெறும் தேர்வுகள்: பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை- ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை பேப்பர்-1 பயாலஜி, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பேப்பர்-2 பிசிகல் சயன்ஸ், ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை பேப்பர்-3 கணிதம். நுழைவுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி ஆகியோர் செய்திருந்தனர்.