மனைவியை சித்ரவதை செய்ததாக ஆயுதப்படை காவலர் கைது
விருதுநகர் அருகே 2-வது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக ஆயுதப்படை பிரிவு காவலரை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே 2-வது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக ஆயுதப்படை பிரிவு காவலரை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தரப்பில் வியாழக்கிழமை கூறியதாவது: விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன்(36). இவர் ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது, காவல் துறையில் பணிக்கு சேர்ந்து விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உயிரிழந்துவிட்டாராம்.
இதையடுத்து, இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி(34) என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் திருமணத்தின் போது நகை, பணம் மற்றும் போதுமான அளவிற்கு சீர்வரிசை பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். ஆனால் மறுபடியும் நகை பணம் கூடுதலாக வாங்கி வந்தால் தான் என்னோடு வாழ முடியும் என கூறி, தொடர்ந்து கொடுமைப்படுத்தியும், சித்ரவதை செய்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.
Advertisement
இது தொடர்பாக தேன்மொழி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணி்ப்பாளரிடம் நேரில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் உடனே ஆயுதப்படை போலீஸார் நாகராஜனை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.