கரிமருந்து திரி கட்டுக்களை கடத்திய இருவர் கைது
விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரி கட்டுக்களை கடத்தியதாக இருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரி கட்டுக்களை கடத்தியதாக இருவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே மத்தியசேனை-ஒண்டிப்புலிநாயக்கனூர் சாலையில் அடிக்கடி வாகனத்தில் அரசு அனுமதியின்றி கரிமருந்து திரிகட்டுக்களை கடத்திச் செல்வதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் சார்பு ஆய்வாளர் வீராச்சாமி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை காலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி போலீஸார் ஆய்வு செய்தனர்.
அந்த வாகனங்களில் சாக்கு பைகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து கட்டுக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில் ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(51), மற்றொருவர் சங்கலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவஜோதி(31) ஆகிய இருவரையும் ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதோடு, இரு வாகனங்களையும், 60 குரோஸ் கரிமருந்து திரிக்கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
Advertisement