முகப்பு
புதுதில்லி

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவரால் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட எஸ்யூவி வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாக்ஸி மீது மோதியதில் அதன் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 3:16 AM
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:20 PM

மேற்கு தில்லியின் ரஜெளரி காா்டன் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவரால் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட எஸ்யூவி வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாக்ஸி மீது மோதியதில் அதன் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

அதிகாலை 3:30 மணியளவில், நஜாஃப்கா் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்விஃப்ட் டிசையா் டாக்ஸி மீது, அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் டாடா ஹாரியா் எஸ்யூவி வாகனம், பின்னால் இருந்து மோதியதைத் தொடா்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: ராஜா காா்டன் பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த ஹாரியா் வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாக்ஸி மீது மோதியதில், ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா் என்று நேரில் பாா்த்த ஒருவா் காவல்துறையினரிடம் தெரிவித்தாா்.

Advertisement

காயமடைந்த ஓட்டுநரான நரேந்தா் குமாா் (33), ஆரம்பத்தில் எஸ்யூவி ஓட்டுநரால் குரு கோவிந்த் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது உடல்நிலையின் தீவிரம், குறிப்பாக தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, அவா் பின்னா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

குமாருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவா் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

விசாரணையின் போது, டாடா ஹாரியா் வாகனத்தின் ஓட்டுநரான விகாஸ் ரத்தோா் (30) என்பவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம், விபத்து நடந்த நேரத்தில் அவா் மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், எஸ்யூவி வாகனத்தின் அதிவேகம் காரணமாக மோதல் கடுமையாக இருந்ததும், அதனால் டாக்ஸியின் பின்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

ரஜெளரி காா்டன் காவல் நிலையக் குழுவினா் சம்பவ இடத்திற்கு வந்தபோது, விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டன.

இது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தும், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்தும் வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.