சிதம்பரம் : கடலில் மூழ்கிய இரு மாணவர்களின் உடல்கள் மீட்பு
சிதம்பரம் அருகே கடலில் மூழ்கிய 3 பேரில், 2 மாணவர்களின் உடல்கள் ராசாப்பேட்டை அருகே கண்டெடுக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே கடலில் மூழ்கிய 3 பேரில், 2 மாணவர்களின் உடல்கள் ராசாப்பேட்டை அருகே கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திங்கள்கிழமை மதியம் கடலில் குளிக்கச் சென்ற நெய்வேலியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர்.
இதில் செவ்வாய்க்கிழமை காலை மீன்பிடிக்க சென்றவர்கள் கடலூர் அருகே ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை இடையே இரு மாணவர்கள் உடலை கண்டெடுத்தனர். மற்றொரு மாணவரது உடலை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
Advertisement
நெய்வேலி வட்டம் 27-ஐ சேர்ந்த காசிநாதன் மகன் கலையரசன் (18), வட்டம் 18-ஐ சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் செபஸ்டியன் (18), வட்டம் 5-ஐ சேர்ந்த இளங்கோ மகன் ஆதர்ஷ் (18). இவர் மூவரும் திங்கள்கிழமை ஒரே மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதி கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிள் அருகே செல்போன்கள், உடைகள், காலணிகளை வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்றனர். ஆனால் கடலில் குளித்த அவர்கள் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து ஊர்மக்கள் போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினரும், மீனவர்களும் கடலில் அம்மாணவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கலையரசன், ஆதர்ஷ் ஆகிய இருவரது உடல்களை கடலூர் அருகே ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கண்டெடுத்தனர், மேலும் மற்றொரு மாணவரான செபஸ்டியன் உடலை தேடி வருகின்றனர்.