முறையான பயிர் சேத கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தி நிதி அமைச்சரிடம் கே.பாலகிருஷ்ணன் கடிதம்
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளை கொண்டு பயிர் சேத கணக்கெடுப்பு எடுக்க
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளை கொண்டு பயிர் சேத கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என சென்னை தலைமைச் செயலகத்தில் நிதிஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.
அந்த மனுவில் தமிழகஅரசு வறட்சியால் பாதிக்கப்பட்டு நிலங்களுக்கு, முதன்முறையாக வறட்சி நிவாரணத் தொகை அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு பெரும் ஆறுதுலை அளித்துள்ளது. அறிவித்தது மட்டுமின்றி உடனடியாக நிவாரணத் தொகை டெல்டா மாவட்டங்களில் வழங்கப்பட்டும் வருகிறது. இழப்பு ஏற்பட்ட நிலங்களை கணக்கிடுவதில் பல தவறுகள் நடந்துள்ளனய மிக குறைந்த அளவே நிலங்கள் கணக்கிடப்பட்டு தற்போது நிவாரணம் வழங்கப்படுகிறது. உதாரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் மொத்தம் 12,152 ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியம், குமராட்சி ஒன்றியத்தின் கிழக்கு பகுதி முழுவதும் கடை, மடை பாசனமாகும். இப்பகுதி முழுவதும் கடல் சார்ந்த பகுதியாதலால் குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீர் பயன்பாடு மிகவும் சொற்ப அளவே உள்ளது.
சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டிலிருந்து இந்த பகுதிக்கு பாசனம் அளிக்கும் கவரப்பட்டு வாய்க்கால் சூரிய கோட்டி வாய்க்கால், மானம்பார்த்தான் வாய்க்கால் உள்ளிட்ட பல வாய்க்கால்கள் மூலம் தொடக்கத்திலிருந்து நீர் வரவில்லை. பயிர்கள் வளர்ந்து ஒரு கட்டத்தில் தண்ணீரின்றி காய்ந்து முழுமையாக அழிந்து விட்டால் அதை கணக்கெடுக்காமல் விடப்பட்டுள்ளது. பயிர்கள் காய்ந்து ஆடு, மாடுகள் மேய்ந்தாலோ அல்லது காய்ந்த பயிர்களை வைக்கோலுக்காக அறுவடை செய்திருந்தாலோ, கணக்கில் சேர்க்கவில்லை. சில கிராமங்களில் சில விவசாய நிலங்களை எழுதிவிட்டு மீதி நிலங்களை எழுத மறுத்துவிட்டார்கள். சில விவசாயிகளுக்கு 4 ஏக்கர் பாதித்து இருந்தால் இரண்டரை ஏக்கர் மட்டும் கணக்கெடுத்துள்ளார்கள். வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இதுகுறித்து கேட்கும் போது கணக்கெடுப்பை குறைந்து எழுத வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக கூறி வருகிறார்கள். 50 விழுக்காட்டிற்கு மேல் இழப்பீடு ஏற்பட்ட 90 சதவீத விவசாயிகள் நிவாரணம் கிடைக்காமல் பெரிதும் வேதனையடைந்துள்ளார்கள் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.