முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதாக புகார்

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகில் 22 மீனவர்கள் கடந்த 27-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனராம். வழக்கமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் 3 அல்லது 4 நாள்களுக்குள் ஊருக்கு திரும்பிவிடுவது வழக்கம். அதன்படி, இன்று காலை அவர்கள் கரைக்கு திரும்பி இருக்க வேண்டுமாம். ஆனால், 22 மீனவர்களும் கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் தருவைகுளத்தில் உள்ள தூய மிக்கேல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதாக மீனவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி தருவைகுளத்தில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகில் 22 மீனவர்கள் கடந்த 27-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனராம். வழக்கமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் 3 அல்லது 4 நாள்களுக்குள் ஊருக்கு திரும்பிவிடுவது வழக்கம். அதன்படி, இன்று காலை அவர்கள் கரைக்கு திரும்பி இருக்க வேண்டுமாம். ஆனால், 22 மீனவர்களும் கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் தருவைகுளத்தில் உள்ள தூய மிக்கேல் விசைப்படகு மற்றும் படுவலை தொழில்புரிவோர் முன்னேற்ற சங்க அலுவலகம் முன்பு திரண்டனர்.இதற்கிடையே, மாயமான 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் இந்த தகவலை கரையில் இருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால், தருவைகுளம் பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பெண்கள் சாலையில் திரண்டனர். இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 22 மீனவர்கள் 3 விசைப்படகுகள் ஒரு நாட்டுப் படகு ஆகியவற்றை பத்திரமாக மீட்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் தருவைகுளத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்கள் கலைந்துச் செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தருவைகுளம் தூய மிக்கேல் விசைப்படகு மற்றும் படுவலை தொழில்புரிவோர் முன்னேற்ற சங்கத் தலைவர் பவுல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர்.அந்த மனுவில் :

 தருவைகுளம் 60 வீடு காலனி பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசத்துக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (24), சுலைமான் மகன் அப்பாஸ் (38), ஜெய்னா மகன் அப்பாஸ் (59), நிஜாம் (45), ரபீக் (42) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.இதேபோல, வேம்பார் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டிக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளம் 100 வீடு காலனி பகுதியைச் சேர்ந்த ராஜன் (27), ரூபன் (23), செல்வராஜ் (55), தொம்மை அந்தோனி (50), முருகன் (35) ஆகியோரும், 60 வீடு காலனி பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் (27), சகாயமணி (25), குமார் (21), கென்னடி (50), ராபின் (26), மேன்லி (23) ஆகியோரும் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.தருவைகுளம் 100 வீடு காலனியைச் சேர்ந்த அந்தோனி மிக்கேல் தனது நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த அந்தோனிராஜ் (20), அந்தோனி சுதாகர் (30), கபீர்தாஸ் (38), ஹனிபா (43), அருள்ராஜ் (53) ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார்.இந்த 22 மீனவர்களையும் அவர்கள் சென்ற விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுடன் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.