வேளாண் கடனை ஊழல் செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உழவர் முன்னணி கோரிக்கை
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்தியஅரசு வங்கிகள் வழங்கிய வேளாண் கடனில் ஏறத்தாழ 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடத்துள்ளதாக அரசு
வேளாண் கடனில் ஊழல் செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்தியஅரசு வங்கிகள் வழங்கிய வேளாண் கடனில் ஏறத்தாழ 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடத்துள்ளதாக அரசு தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயிகள் பெயரால் நடந்துள்ள இந்த மாபெரும் ஊழல் இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அரசுடைமை வங்கிகள் வழங்கிய வேளாண் கடன்களில் 23 விழுக்காடு கடன்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆவணங்களை திருத்தியும், போலி கையொப்பமிட்டும் நடைபெற்ற மோசடிகள் மட்டுமின்றி வேளாண் கடன்பெறத் தகுதி இல்லாதவர் பலரும் உழவர்கள் பெயரால் வங்கிக்கடன் பெற்றுள்ளனர். இதனால் 2008-ம் ஆண்டு மத்தியஅரசு அறிவித்த கடன் தள்ளுபடி சலுகையை விவசாயிகள் அல்லாத பலரும் பெற்று சட்டவிரோதமாக பயனடைந்துள்ளனர்.
இக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட காலத்திலேயே வங்கிகள் அறிவித்த புள்ளி விவரங்களை ஆதாரமாக காட்டி இதில் நடந்துள்ள முறைகேடுகளை தமிழக உழவர் முன்னணி முன்பே சுட்டிக்காட்டியுள்ளது. வேளாண்மை வகையினத்தின் கீழ் மோட்டார் பம்பு செட்டுகள், உரம், பூச்சிக்கொல்லி, விதை தயாரிப்பு, உணவுப்பதப்படுத்துதல் உள்ளிட்ட பலத் தொழில் நிறுவனங்களை மத்தியஅரசு கடந்த 2007-ல் கொண்டு வந்தது. இதுதான் இந்த மாபெரும் ஊழலுக்கு சட்டவாய்ப்பைத் திறந்துவிட்டது.
எனவே இப்போது வேளாண் கடன்களை மோசடியாக பெற்ற நிறுவனங்கள் மீதும், தனி நபர்கள் மீதும், இந்த முறைகேட்டுக்குத் தேவையான வங்கி அதிகாரிகள் மீதும், அரசியல் புள்ளிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அரசு வங்கிகளில் வேளாண்மை என்ற பெயரால் தொழில் நிறுவனங்களும், வேளாண்மைக்கு தொடர்பில்லாத தனி நபர்களும் கடன் பெறுவதற்கு உள்ள அரசின் கொள்கை முடிவுகளை உடனடியாக கைவிட வேண்டும். வேளாண்மை என்ற பெயரில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டுமே வழங்கப்படுவதற்கு உறுதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.