இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்: வைகோ
இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது ஐ.நா மனித உரிமை கவுன்சில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என கோருகிறோம். இந்த
இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது ஐ.நா மனித உரிமை கவுன்சில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என கோருகிறோம். இந்த தீர்மானத்தை இந்தியா வைக்க தயாரா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக மகளிரணி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மாநில மகளிரணிச் செயலாளர் குமரி விஜயகுமார் தலைமை வகித்தார். புதுச்சேரி மகளிரணி நிர்வாகி கெளரி கருணாகரன் வரவேற்றார். விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
இலங்கை மீது ஐ.நா மனித உரிமை கவுன்சில் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா கோர வேண்டும். இதைவிட்டு, விட்டு திசை திருப்பும் வேலைக்கு இடம் கொடுக்க மாட்டோம். நான் சுயநலத்திற்காக தவறு இழைக்க மாட்டோன். நேர்மை, நாணயத்தை பின்பற்றுபவன். ஒரு இனத்தையே அழிக்க யுத்தத்தை நடத்தினீர்கள். திமுக ஆட்சியில் பிரபாகரனின் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற மறுக்கப்படவில்லையா? இலங்கையில் சிங்களவர்களுடன், தமிழர்கள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என யார் சொன்னாலும் அவர் பச்சை துரோகியாவார். இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலை குறித்தும், போர்க்குற்றம் குறித்தும் நீதி கேட்கிறோம். நீதி கிடைக்கும். அந்த நாள் வரும். நம்மிடம் ஆதாரம், சாட்சியங்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் எங்களது கணேசமூர்த்தி எம்பி நாடாளுமன்றத்தில் பேசுகையில் இலங்கை இறையாமையை காப்பாற்றுகிறோம் என இந்தியாவின் இறையாமையை இழந்து விடாதீர்கள் என தெரிவித்தார். எனவே உரிமைக்காக போராடி வெற்றி பெற மகளிர் தின நாளில் உறுதி ஏற்போம்.
சிதம்பரம் நகரில் கனகசபைநகரில் ஞானப்பிரகாசர் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு யாழ்ப்பானத்திற்கும் தொடர்பு உண்டு. தில்லையில் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பானம் மடங்கள் 3 உள்ளது. 1910-ல் இலங்கையிலிருந்து வந்து ஆறுமுகநாவலர் இங்கு உளவிய இடம்தான் தில்லை. அந்த தில்லைக்கு வந்து நீதி கேட்கிறோம். இங்கு முத்துலட்சுமிரெட்டி, மூவலூர் ராமாமிர்தம், வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரின் பெருமைகள் பற்றி கூறினார்கள். தமிழச்சிகள் மான உணர்ச்சியும், தியாக குணமும் கொண்டவர்கள் என காந்தி கூறியுள்ளார். அந்த தமிழச்சிகளுக்கு துன்பம் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கும் ஈழத்தில் இந்த நிமிடம் வரை பெண்களுக்கு துன்பம் ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு உள்ளதா? விநோதினி, மதியழகி ஆகிய இளம்பெண்கள் அமிலம் வீசப்பட்டதால் இறந்துள்ளனர். இந்த குற்றங்களுக்கு பின் மது உள்ளது. 90 சதவீத குற்றங்களுக்கு பின்னர் ஆல்கஹாலும், மதுவும் தான் உள்ளது. பருவம் அடையாத பிஞ்சுகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். 20 நிமிடத்திற்கு ஒரு பெண் நாசமாக்கப்படுகின்றார் என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. பெண்கள் வீதிகளில் நடந்து செல்ல, பள்ளி, கல்லூரிக்கு பத்திரமாக சென்று வீடு திரும்ப வேண்டும். ஆனால் பாதுகாப்பு உள்ளதா என்றால் இல்லை. எனவே சகோதரிகளை காக்கும் கடமை ஆண்களுக்கு உண்டு. எனவே இந்த மகளிர் தின நாளில் உறுதி ஏற்க வேண்டும் என கூறினார்.