அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்: ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் ஆதரவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேர் 5-ம் நாள் நாளாக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 39 பேர் 5-ம் நாள் நாளாக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அம்மாணவர்களுடன் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 5-ம் நாளாக இன்று மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இருப்பினும் நீதிவள்ளல், குபேரன் ஆகியோர் தலைமையில் சுமார் 39 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் பிரபு, சுப்பிரமணியசிவா, தங்கராஜ், மணிகண்டன், வசந்தராஜா, ராஜன், ராகுல், சிவராஜ், ஜெகதீசன், விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் மயக்கடைந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் ஆகியோர் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.