தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: நத்தம் விஸ்வநாதன்
மதுவிலக்கு வேண்டும் என்பதில் எல்லோரையும்விட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக அக்கறை உள்ளது. அது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் தான் சமூக விரோதிகளுக்குச்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவது நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் நடைபெற்ற 2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பாமக உறுப்பினர் எம். கலையரசு (அணைக்கட்டு), எஸ். ஜான்ஜேக்கப் (கிள்ளியூர்) ஆகியோர் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-
மதுவிலக்கு வேண்டும் என்பதில் எல்லோரையும்விட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக அக்கறை உள்ளது. அது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் தான் சமூக விரோதிகளுக்குச் சென்று கொண்டிருந்த மது வருவாயை அரசின் கஜானாவிற்கு கொண்டு வரவே டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டது.இந்தியாவில் குஜராத் தவிர வேறு எங்கும் மதுவிலக்கு இல்லை. அண்டை மாநிலங்களில் மது விற்பனை நடக்கும்போது இங்கு மட்டும் தடை செய்தால் சமூகவிரோதிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளின் சந்தையாக தமிழகம் மாறிவிடும்.குஜராத்தில்கூட சட்டப்பூர்வமாக மதுவிலக்கு உள்ளது. ஆனால் மது தாராளமாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் கூட மதுவை கடைகளில் சென்றுதான் வாங்க வேண்டும். ஆனால், அங்கு வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பதாக அங்கிருந்த வந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement
கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பாமக மாநாடு நடந்த நாளில் மட்டும் அந்தப் பகுதி டாஸ்மாக் கடைகளில் ரூ. 50 லட்சத்துக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது. பாமக தலைவர் முதலில் கட்சி தொண்டர்களை மது குடிக்காமல் திருத்த வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கு கேட்கும் காங்கிரஸார், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்பட காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு முதலில் அறிவுரை கூற வேண்டும். இந்தியா முழுவதும் மதுவிலக்கு வராத வரை தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு சாத்தியமில்லை என்றார் அவர்.