திருக்கோவிலூர் அருகே கிணற்றில் மூழ்கி கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர் பலி
திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் கிணற்றில் மூழ்கி இருவர் பலியாயினர்.
திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் கிணற்றில் மூழ்கி இருவர் பலியாயினர்.
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் விஜி (23), முனிவேலப்பா என்பவரின் மகன் சுப்பிரமணி (22) இருவரும் வீரட்டகரம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரின் மகன் ஏழுமலையின் வீட்டுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு வந்தனர். மூவரும் கோலார் பகுதியில் கட்டட வேலை செய்து வருகின்றனர். நண்பர் என்பதால், இருவரும் வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இரவு பத்து மணி அளவில் இருவரையும் காணாமல் அங்கிருந்தோர் அவர்களைத் தேடினர். அப்போது, வேலு மகன் அய்யனார் என்பவருக்குச் சொந்தமான கிணற்றின் மேல் இருவரது ஆடைகளும் இருந்தன. இதை அடுத்து, அங்கிருந்தோர் கிணற்றில் தேடியபோது இருவரின் உடல்களும் கிடைத்தன. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு இரவு 11மணி அளவில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து காவல் ஆய்வாளர் மகேஷ் விசாரணை மேற்கொண்டார்.