சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆதரவின்றி நின்று கொண்டிருந்த ஒரிஷா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ரயில்வே போலீஸார் நள்ளிரவு மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் சந்திப்பு ரயில் நிலையம் 3-வது நடைமேடையில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஆதரவின்றி நின்று கொண்டிருந்ததை ரயில்வே போலீஸார் நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அச்சிறுமி ஒரிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், கேரள மாநிலம் ஆலுவா என்ற பகுதியில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார் என்பது தெரிந்தது. சொந்த ஊருக்கு செல்ல வேண்டி ரயில் ஏறி வந்த அவர், சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் தெரியாமல் இறங்கிய போது ரயிலை தவற விட்டு விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அச்சிறுமியை மீட்ட ரயில்வே போலீஸார், சேலம் தொன்போஸ்கோ மையத்தில் இன்று காலை ஒப்படைத்தனர். மேலும், அச்சிறுமி குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.