கூலி வழங்காததை கண்டித்து சாலைமறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இன்று வழக்கம் போல் கருப்பம்பட்டி கண்மாய் ஓடை தூர்வாரும் பணிக்கு தொழிலாளர்கள் வந்தனர். அதையடுத்து, திடீரென கூலியை வழங்க வலியுறுத்தி விருதுநகர்-சிவகாசி-அழகாபுரி முக்குச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கூலி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சியை சேர்ந்த கிராம பொதுமக்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் கண்மாய் பகுதி கரை பலப்படுத்துதல், ஓடை தூர்வாரும் பணிகளைச் செய்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதமாக இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூலி வழங்காமல் இருந்துள்ளனர். இது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் எழுத்தரிடமும் முறையிட்டாலும், இன்னும் பணம் வரவில்லையென கூறி வந்துள்ளனர். அதோடு, கூலியும் குறைவாகவே வழங்கியுள்ளனர்.
இன்று வழக்கம் போல் கருப்பம்பட்டி கண்மாய் ஓடை தூர்வாரும் பணிக்கு தொழிலாளர்கள் வந்தனர். அதையடுத்து, திடீரென கூலியை வழங்க வலியுறுத்தி விருதுநகர்-சிவகாசி-அழகாபுரி முக்குச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி தலைவர் நாகராஜ், வட்டாட்சியர் மங்களநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாய்ஸ், ஆமத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இத்திட்டத்தில் வேலையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.80 முதல் ரூ.90 வரையில் வழங்கப்படுவதாகவும், அதுவும் குறிப்பிட்ட நாள்களில் வழங்காமல் தாமதமாக வழங்குகிறார்கள். அதேபோல், கிராம ஊராட்சி பணியாளர்கள் குறிப்பிடும் பணியை செய்தாலும் முழு அளவு கூலி வழங்குவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Advertisement
உடனே கூலியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக ஊராட்சி தலைவர் நாகராஜ் உறுதியளித்தார். அதன் அடிப்படையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால், விருதுநகர்-சிவகாசி, விருதுநகர்-அழகாபுரி-ராஜபாளையம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் வழியாகச் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. அதனால், பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள் அவதியடைந்தனர்.