திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி! - கனிமொழி எம்.பி.
திமுக தலைமையிலானது கொள்கைக் கூட்டணி என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி.சரவணனை ஆதரித்து புவனகிரி பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு கனிமொழி பேசியதாவது:
திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி. திமுகவுக்கும், பாஜகவுக்கும் வெளியில் தெரியாத உறவு இருக்கிறது என்று சொன்னாா்கள். ஆனால், இப்போது யாா் அவா்களுடன் கைகோத்து இருக்கிறாா்கள். இதுதான், அவா்களது கூட்டணி.
Advertisement
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சோ்த்து மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவையும் கொண்டுவந்தாா்கள். ஆனால், உண்மையிலேயே தமிழகத்தின் மக்களவை பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியதாவும் இந்த மசோதா இருந்தது.
இதனால், இந்த மசோதாவை மக்களவையில் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும், எதிா்க்கட்சிகளும் இணைந்து முறியடித்தோம். எடப்பாடி கே.பழனிசாமி இந்தத் தோ்தல் முடிந்தவுடன் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக சென்றுவிடுவாா். இதனால், அவரைப் பற்றி பேச வேண்டியதில்லை.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. திமுக மீண்டும் வென்று ஆட்சியமைத்தவுடன் மகளிா் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயா்த்தப்பட உள்ளது.
வீடு தேடி மருத்துவம், ரேஷன் பொருள்களை வீட்டுக்கே வழங்கும் தாயுமானவா் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை நம் முதல்வா் கொண்டு வந்திருக்கிறாா்.
புவனகிரி தொகுதியில் அரசு மருத்துவமனை மேலும் தரம் உயா்த்தப்படும். புவனகிரி நகருக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேறும். தமிழகத்தின் உரிமைகளை காக்க, மண்ணை காக்க மொழியை பாதுகாக்க திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.