சிதம்பரத்திலிருந்து இரவு நேர பேருந்துகள் நிறுத்தம்: கிராமப்புற மக்கள் அவதி!
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் தொடர்ந்து பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் நடைபெற்று ர்.
சிதம்பரத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் தொடர்ந்து பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், போலீஸார் கிராமப்புறங்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் செல்லும் இரவு நேரப் பேருந்துகளை இயக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப் புறங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் மக்களும், பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போலீஸார் அறிவுறுத்திலுக்கு மீறி கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளை, போலீஸார் தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கழக டெப்போவிற்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் பயணிகள் பாதியிலேயே பேருந்திலிருந்து இறங்கி தங்களது கிராமத்திற்கு செல்ல வேறு வாகனங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
6 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாததால், மாலை 4 மணிக்கே தாங்கள் வேலை பார்க்கும் வர்த்தக நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் தங்களது கிராமத்திற்கு புறப்பட்டு சென்று விடுவதால் சிதம்பரம் நகரில் வர்த்தகமும் பாதித்துள்ளது. கல்வீசி தாக்குதல் சம்பவத்தால் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்படுவதால் சிதம்பரம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் நடராஜர் கோயில் மற்றும் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலாப் பகுதியில் கூட்டம் குறைவாக உள்ளது. சிதம்பரத்திலிருந்து மாலை 6 மணிக்கு மேல் சென்னை, சேலம், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டதூரம் செல்லும் பேருந்துகள் மட்டும் போலீஸார் கான்வாய் பாதுகாப்பு மூலம் இயக்கப்படுகிறது.