சிதம்பரத்தில் பாமக வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு
சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேண்டுகோளை அடுத்து பெரும்பாலான கடைகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேண்டுகோளை அடுத்து பெரும்பாலான கடைகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, முட்லூர், கிள்ளை, வல்லம்படுகை, அம்மாப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், விபீஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை கடையடைப்பு நடத்த வியாபார நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், நகரச் செயலாளர் முத்து.குமார், விவசாய சங்கத் தலைவர் சஞ்சீவி ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த மேலரதவீதி, காசுக்கடைத்தெரு, தெற்குரதவீதி, வேணுகோபால்பிள்ளைத்தெரு, எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகர்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையத்தில் ஒரு சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துகடைகள், பூக்கடைகள் மட்டும் திறந்திருந்தன.
Advertisement
குறிப்பாக ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால், ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதியுற்றனர்.