9 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி: கர்நாடகத்திற்கு சாதகமாக அமையுமா?
9 ஆண்டுகளுக்கு பிறகு, மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இது கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியை பெற உதவியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
9 ஆண்டுகளுக்கு பிறகு, மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இது கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியை பெற உதவியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரமடைந்த 1947 முதல் 1983-ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெற்றுவந்தது. வலுவான எதிர்க்கட்சியும் இல்லாத காலமது. 1977-இல் தேசிய அளவில் ஜனதா கட்சி உருவான பிறகு, கர்நாடகத்திலும் அதன் அதிர்வுகள் தென்பட தொடங்கின. விளைவு, 1983-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராமகிருஷ்ணஹெக்டே தலைமையில் கர்நாடகத்தில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சி மலர்ந்தது. பெரும்பான்மை இல்லாததால், பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைந்தது.தொலைபேசி ஒட்டுக்கேட்புவிவகாரத்தால் முதல்வர் பதவியை துறந்து மீண்டும் தேர்தலை சந்தித்த ராமகிருஷ்ணஹெக்டே, 1985-இல் பெரும்பான்மை பலத்துடன் ஜனதா கட்சியின் ஆட்சியை அமைத்தார்.
1977 முதல் 1979-ஆம் ஆண்டுவரை மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்றபோது, கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் மற்றும் குண்டுராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. 1983 முதல் 1989 வரை கர்நாடகத்தில் ராமகிருஷ்ணஹெக்டே தலைமையில் ஜனதா ஆட்சி நடைபெற்றபோது, மத்தியில் இந்திராகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
1989-இல் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. வீரேந்திரபாட்டீல் முதல்வராக இருந்தார். அப்போது மத்தியில் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சி இருந்தது. 1991-இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. பி.வி.நரசிம்மராவ், பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. ஆனால், 1990 முதல் 1992 வரை எஸ்.பங்காரப்பாவும், 1991 முதல் 1994 வரை வீரப்பமொய்லியும் முதல்வராக பதவியேற்றனர். இந்த 4 ஆண்டுகாலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.
1994-இல் கர்நாடகத்தில் ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தது. 1994 முதல் 1996 வரை தேவகௌடாவும், 1996 முதல் 1999 வரை ஜே.எச்.பாட்டீலும்முதல்வராக இருந்தனர். 1996-இல் 13 நாட்களுக்கு மட்டும் அடல்பிகாரிவாஜ்பாய் பிரதமராக இருந்தார். 1996 முதல் 1998 வரை மத்தியிலும், மாநிலத்திலும் ஜனதா தளம் ஆட்சி நடைபெற்றுவந்தது. 1998 முதல் 2004 வரை மத்தியில் அடல்பிகாரி தலைமையிலான பாஜக ஆட்சி இருந்தது. அப்போது கர்நாடகத்தில் 1999 முதல் 2004 வரை எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. 2004--ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைபெற்றது. 2006 முதல் 2007 வரை குமாரசாமி தலைமையிலான மஜத-பாஜக ஆட்சியும், 2008 முதல் எடியூரப்பா, சதானந்தகௌடா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோர் தலைமையிலான பாஜக ஆட்சியும் நடைபெற்றது.
மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறுகட்சிகளின் ஆட்சி நடைபெற்றபோது, மத்தியில் ஆளும் கட்சிகள் கர்நாடகத்தின் நலன்கள் காற்றில் பறக்கவிடப்பட்டதாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும் மாநிலத்தை ஆண்ட கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டிவந்துள்ளன. இந்நிலையில், வாராது வந்த மாமணி போல மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள், நீர்ப்பாசன மற்றும் மின் உற்பத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு, போதுமான நிதியுதவியை மாநில அரசுக்கு வழங்கும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டதிட்டம் மத்திய அரசு நிலக்கரி வழங்காததால் முடங்கியுள்ளது. கிருஷ்ணா மேலணை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களும் நிதி பற்றாக்குறையால் மூழ்கியுள்ளன. மத்திய-மாநில அரசுகளின் தலா 50 சத நிதிப்பகிர்வு திட்டத்தில் ரயில்வே திட்டங்களை முன்வைத்தபோது, அந்த திட்டங்கள் நகர்ந்தபாடில்லை. ஹைதராபாத்-கர்நாடக பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371 திருத்தப்பட்டப்போதும், அதை செயல்படுத்த நிதி ஒதுக்கவில்லை. கன்னடத்திற்கு செம்மொழி தகுதி வழங்கியபோதும், அதற்கான நிதி ஒதுக்காததால் பயனற்ற நிலையில் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு மாநிலத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு மூலம் தீர்வுகாணும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.