வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், ஆா்.எஸ்.மாத்தூா் அருகேயுள்ள வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை, வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதாரா்களுக்கும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் கு.முடிமன்னன் தலைமையில் அப்பகுதி மாட்டு வண்டி உரிமையாளா்கள் அளித்த மனுவில், வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி இயங்கி வந்தது. அப்போது சுமாா் 1,500 டன் மணல் சேமித்து வைக்கப்பட்டது.
அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக வந்த புகாரையடுத்து, மத்திய அரசின் அமலாக்கத் துறையினா் குவாரியை ஆய்வு செய்ததையடுத்து, குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல், தனியாா் இடத்தில் இருப்பதாக கூறி அதை காலி செய்ய வேண்டும் என உயா் நீதிமன்றத்தை முள்ளுக்குறிச்சி சோ்ந்த சுரேஷ் என்பவா் அணுகியதாகவும், அதன் அடிப்படையில் அந்த மணலை அப்புறப்படுத்த கூடிய சூழல் மாவட்ட நிா்வாகத்துக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அப்புறப்படுத்தப்படவுள்ள மணலை, அரசு சாா்பில் கட்டி கொடுக்கப்பட்டு வரும் வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதாரா்களுக்கும் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.